ராமநாதபுரம், பிப். 8-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின் அணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழக அரசு மின் வாரியத்துக்கு சொந்தமான வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. வழுதூரில் மேலும் 200 மெகாவாட் எரிவாயு மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1600 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்காக முதற்கட்டமாக உப்பூர் பகுதியில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முகமது ஜெகபர், துணை தலைவர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜாகாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.