Recommendations
Recent Activity
2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: மத்தியில் ஆட்சி தொடர காங்கிரசுக்கு அருகதை இல்லை: சந்திரபாபுநாயுடு பேச்சு
நகரி, பிப். 5-
 
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தேவாங்க மகா சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-  
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் கண்ணத்தில் அறைந்தது போல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. 122 உரிமங்களை ரத்து செய்து உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆனால் வெட்கம் இல்லாமல் இந்த அரசு ஆட்சியில் இருக்கிறது.
 
இந்த ஊழலில் பிரதமருக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் காங்கிரசார் கூறுகிறார்கள். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் அது குடும்ப தலைவர் பொறுப்பாக மாட்டாரா? தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு செய்வதைவிட பெரிய குற்றமாகும்.  
 
காங்கிரஸ் என்றாலே ஊழல் கட்சி என்றாகி விட்டது. சிறைக்கு செல்லக்கூட அவர்கள் பயப்படுவது இல்லை. மாமியார் வீட்டுக்கு செல்வதுபோல் செல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு மத்தியில் ஆட்சியில் நீடிக்க காங்கிரசுக்கு எந்தவித அருகதையும் இல்லை.
 
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.