கொலக்கம்பை,பிப். 3-
நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள சொல்ராக் கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் உள்ளது.
இங்கு கொடிய வன விலங்குகளான சிறுத்தைப் புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. அவைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சொல்ராக்கிராமத்தை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதி தேயிலை தோட்டத்தில் 3 1/2 வயது மதிக்கதக்க பெண் புலி இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொது மக்கள் குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். சிறுத்தைப் புலி இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். எனவே புழுக்கள் அரித்து காணப்பட்டது.
கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பின்னர் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது. காட்டுக்குள் வன விலங்குகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக காயம் அடைந்து இந்த சிறுத்தை புலி இறந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கொலக் கம்பை பகுதியில் அதிக அளவில் வன விலங்குகள் மர்மமான முறையில் இறந்து வருகிறது. வன விலங்குகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொலைக்கம்பை அருகே உள்ள மலை கிராமங்களான கெண்டேல், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அட்டகாசம் நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.