வாணியம்பாடி, பிப்.3-
வாணியம்பாடி அருகே வரதட்சணை சித்ரவதையில் இளம்பெண் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது24), கட்டிட மேஸ்திரி. இரவது மனைவி ஷோபனா (வயது21), கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மணிகண்டனும் அவரது தாயார் பொன்னியும் சேர்ந்து ஷோபனாவிடம் உனது தாயார் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வா என்று கூறி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி ஷோபனா வீட்டில் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உதவி கலெக்டர் (பொறுப்பு) சாந்தா விசாரணை நடத்தினார்.
அவரிடம் ஷோபனா அளித்த வாக்குமூலத்தில் கணவனும், மாமியாரும் சேர்ந்து மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ஷோபனா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக வாணியம் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் அவரது தாயார் பொன்னி (வயது50), ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.