தர்மபுரி, பிப். 2-
தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவு கடத்தல் பிரிவு தடுப்பு போலீசார் தர்மபுரி பஸ் நிலையத்தில் இன்று காலை கண்காணித்தனர். அப்போது 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சேர்ந்து கொண்டு வேறு ஒரு பஸ்சில் இருந்து ஓசூர் செல்லும் பஸ்சில் மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 400 கிலோ அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மொரப்பூர் அருகே உள்ள தாசரள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் இந்த பகுதியில் ரேசன் அரிசிகளை மொத்த வாங்கி அதை பஸ்சில் ஓசூருக்கு கொண்டு சென்று ஓசூரில் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.