பெருந்துறை, பிப். 2-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 24). இதேபோல் அந்தியூர் அடுத்த கிழங்குளியை சேர்ந்தவர் நாச்சி முத்து (30). இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தனர். கடந்த 3 ஆண்டாக வேலைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர். 7 மாதமாக தங்களது காதல்கூட்டை கலையாமல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் காதலர்கள் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
புதுமண ஜோடியினர் பெருந்துறையில் சென்னி மலை ரோட்டில் உள்ள காந்திநகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஒன்றாக வேலைக்கும் போய் வந்தனர். அவர்களின் சந்தோஷ வாழ்க்கையில் சங்கீதா கர்ப்பிணி ஆனார். தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் வெவ்வேறு பிராஞ்சில் வேலைப் பார்த்து வந்தனர். அப்போது நாச்சிமுத்து போக்கில் மாற்றமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாச்சி முத்து தனது மனைவியிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். என் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. போய்விட்டு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாராம். வீட்டில் இருந்து ரூ.20 ஆயிரத்தையும் எடுத்துச் சென்று விட்டாராம்.
அன்று போனவர் அதன் பிறகு அவர் திரும்பி வர வில்லை. காதல் (கர்ப்பிணி) மனைவியிடம் போனில் தொடர்பு கொண்டும் பேசவில்லையாம். காதல் கணவரின் திடீர் பிரிவு சங்கீதாவின் மனதை மிகவும் பாதித்தது.
இதனால் அவர் நம்பிக்கை இழந்து பெருந்துறை போலீஸ் நிலையத்தை அணுகினார். தனது கணவர் மாயமான விவரம் குறித்து கண்ணீருடன் மனு கொடுத்த அவர், என் கணவரை மீட்டுத்தாருங்கள் என்று கூறினார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் மனுவை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
காதலில் விழுந்து காதலனையே மணந்த அந்த அபலை கர்ப்பிணிப்பெண் காதல் கணவர் மீண்டும் வருவாரா...? தன்னுடன் குடும்பம் நடத்துவாரா? தான் பெற்றெடுக்கப்போகும் மழலையை கையில் எடுத்து கொஞ்சுவாரா? என்ற ஏக்கத்துடன் தவித்து வருகிறார்.