நெல்லை, ஜன. 31-
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரியும், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாளையில் வருகிற 4-ந்தேதி காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய மந்திரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் ஏற்பட்டதில்லை.ஆனால் கடந்த 10 மாதமாக எதிர்க்கிறார்கள்.அணுமின் நிலையம் திறக்கப்படாததால் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது. கிராம பகுதியில் 8 மணி நேரமும்,நகர பகுதியில் 6 மணி நேரமும் மின்தடை ஏற்படுகிறது. அணு உலையை திறப்பது தொடர்பாக மத்திய குழுவினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்கள்.
போராட்ட குழு தலைவர் உதயகுமார் இரு நாட்டு பிரஜையாக உள்ளார்.அமெரிக்க குடியுரிமையும் அவருக்கு உள்ளது. அவர் மக்களிடம் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.தமிழக அரசு மத்திய அரசை குறைகூறுவதை ஏற்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை, மாவட்ட காங்.தலைவர்கள் சுந்தர்ராஜபெருமாள்,மோகன்குமாரராஜா,பாராளுமன்ற இளைஞர்காங்கிரஸ் தலைவர்கள் நெல்லை வி.பி.துரை, தென்காசி பாக்கிய ராஜ், தூத்துக்குடி பெருமாள் சாமி, கன்னியாகுமரி துரை உள்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து யுவராஜ 3 மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது அவர் நிருபர் களிடம் கூறுகையில்:-
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த மோதல் சம்பவத்துக்கு காங்கிரஸ் மீது புகார் கூறுவது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை. மதரீதியாக மக்களை துண்டி வரும் உதயகுமாரை அரசு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.