குளச்சல், ஜன.26-
குளச்சலை அடுத்த வாணியக்குடியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(34). இவர் 9 பேருடன் கடந்த 19-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு படகு உடைந்த நிலையில் 4 பேர் எங்களை காப்பாற்றுங்கள் என குரல் எழுப்பியபடி தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
உடனே அவர்களை மீட்டு தங்களது படகில் ஏற்றிக் கொண்டனர். அவர்களிடம் விசாரித்த போது 4 பேரும் இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பார மாவட்டத்தை சேர்ந்த பஷீர்(40), இஸ்மாயில் லெப்பை(52), நயிம்(36), அப்துல்ரகிம்(55) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கடலோர காவல்படைக்கும், குளச்சல் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் காப்பாற்றப்பட்ட மீனவர்களுடன் குமரி மீனவர்கள் கரை திரும்பினர். கரைக்கு வந்ததும் இலங்கை மீனவர்கள் 4 பேரையும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் மீனவர்களின் ஆவணங்களை சரி பார்த்து விசாரித்தனர். அப்போது 9-ந் தேதியே மீனவர்கள் இலங்கை கடற்கரையில் இருந்து புறப்பட்டு வந்ததாகவும், 13-ந் தேதி விசைப்படகு திசைமாறி சென்றதால் டீசல் தீர்ந்ததாக கூறினர்.
அப்போது படகு உடைந்ததால் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் ஐஸ் கட்டிகளை கடலில் கொட்டி விட்டு படகிலேயே தத்தளித்தோம். பல நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்தோம்.
இந்தநிலையில் தான் வாணியக்குடி மீனவர்கள் தங்களை காப்பாற்றியதாக இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார், கடலோர காவல் படை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டது குறித்து கலெக்டர் நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும், உடைந்த படகின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மீனவர் தோழமை இயக்க பொதுச் செயலாளர் அருட் பணியாளர் சர்ச்சில் கூறினார்.