வாணியம்பாடி, ஜன.25-
வேலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பின் நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும், கட்சியின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. இளைஞர் அணியில் ஏற்கனவே பணியாற்றிய நிர்வாகிகள் மற்ற அமைப்புகளில் பணியாற்றலாம். ஆரம்ப காலம் தொட்டு இளைஞர் அணியினரால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.
அதே நிலை மீண்டும் வரவேண்டும். இடையில் ஏற்பட்ட தொய்வை மறுபரிசீலனை செய்து அனைவரும் கழக பணியினை செவ்வன ஆற்ற வேண்டும். இளைஞர் அணி தேர்வில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உறுதி. இதில் புதிதாக அளிக்கப்பட்ட பட்டியலில் இளைஞர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது மாற்றி அளித்திருந்தாலோ அவை முறையாக திருத்தம் செய்து கட்சியின் தலைமை அறிவிக்கும்.
அதே வேளையில் இளைஞர் அணியில் தேர்வின்போது விடுபட்ட இளைஞர்களை மாணவர், வழக்கறிஞர் பிரிவு, இளம்பாசறை என்ற பல்வேறு அமைப்புகளில் நிர்வாகிகளாக சேர்க்கப்படுவார்கள். இளைஞர்களைக் கொண்டு தி.மு.க.வை மீண்டும் புத்துணர்வுடன் செயல்படுத்தி, வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.