அரக்கோணம், ஜன.3-
அரக்கோணம் மேலத்நகரை சேர்ந்தவர் பாபு (வயது50) இவர் சுவால்பேட்டை மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். அரக்கோணத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(48) பா.ம.க.நகர முன்னாள் செயலாளர். வடமணபாக்கம் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற கூட்டத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பாபுவுக்கும் கோவிந்தனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோவிந்தன் உள்பட 2 பேர் தன்னை மிரட்டியதாக பாபு அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்கு பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கோவிந்தனை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையொட்டி கோவிந்தன் அரக்கோணத்தில் உள்ள சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். இங்கு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. உடனடியாக அவரை அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் திவீர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இறந்தார்.
இதுபற்றி தகவலை அறிந்ததும் பா.ம.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். அரக்கோணம் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். மாவட்ட செயலாளர் சரவணன், நகர செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவிந்தன் மீது வழக்கு போட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் இறந்து விட்டார் என்றும் இதில் நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டி.எஸ்.பி. சீதாராமன், தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மர்மமான முறையில் இறந்த கோவிந்தனின் மனைவி உமாமகேஸ்வரி காவேரிபாக்கம் ஒன்றிய குழு உறுப்பினராகவும் மாவட்ட பா.ம.க. பொருளாளராகவும் உள்ளார்.