காட்பாடி, அக்.18-
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 54 மாணவ- மாணவிகள் கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்த பயிற்சிக்கு சென்றனர். 7 நாள் பயிற்சி முடித்து கொண்டு 16-ம் தேதி ரெயில் மூலம் வேலூர் திரும்பி கொண்டிருந்தனர். அதற்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஹீப்ளி ரெயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் மாணவிகள் இருந்த பெட்டியில் ஏறியது மாணவர்களிடம் உட்கார இடம் கேட்டு தகராறு செய்தனர். அதற்கு மாணவர்கள் நாங்கள் முன்பதிவு செய்து பயணம் செய்கிறோம். நீங்கள் வேறு பெட்டிக்கு செல்லுங்கள் என கூறினர்.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தங்களது செல்போனில் வேறு யாரிடமோ பேசினர். ஹீப்ளியிலிருந்து புறப்பட்டு 3-வது ரெயில் நிலையம் வந்த போது அங்கு கத்தி, இரும்பு ராடுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ரெயிலில் ஏறியது. 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து கொண்டு மாணவர்களை தாக்கினர்.
இதில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர்களிடம் இருந்து செல்போன் பணம் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்து சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆதரவதாக கல்லூரி மாணவர்கள் திரண்டனர். நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகத்தினருக்கும் மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரியில் இருந்து கண்ணாடி, கம்ப்யூட்டர் சாதனங்களை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவத்தால் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்த காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி மாணவர்கள் திடீர் ரகளையால் காட்பாடி ரோட்டில் சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.