2-வது சம்மன் விழுப்புரம் போலீசில் விசாரணைக்கு புதுவை அமைச்சர் இன்று ஆஜராவாரா?
Chennai
செவ்வாய்க்கிழமை,
அக்டோபர் 18,
1:47 PM IST
0
கருத்துக்கள்
புதுச்சேரி, அக்.18-
விழுப்புரம் போலீசில் விசாரணைக்கு புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராவாரா என கேள்வி எழுந்துள்ளது. புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் எஸ்.எஸ்.எல்.சி. தனி தேர்வை திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆள் மாறாட்டம் செய்து எழுதியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை செய்த கல்வி அதிகாரிகள் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் மீது ஆள் மாறாட்டம், மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளில் விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சில பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை ஆகும். இதோடு அமைச்சர் கல்யாணசுந்தரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விழுப்புரம் போலீசில் கடந்த 9-ந் தேதி புதுவை சபாநாயகர் சபாபதியிடம் சம்மன் அளித்தனர். சம்மனை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சபாபதி இன்னும் 2 நாளில் ஆஜராவார் என்று உறுதி அளித்தார்.
ஆனால் 11-ந் தேதி அமைச்சர் கல்யாண சுந்தரத்தை கண்டு பிடித்து சம்மனை கொடுக்க முடியவில்லை எனக்கூறி சட்டசபை செயலாளர் ஊழியர்கள் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் சம்மனை திருப்பி அளித்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாலை விழுப்புரம் போலீசார் சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசத்திடம் மீண்டும் சம்மன் அளித்தனர். இந்த சம்மனில் வருகிற 18-ந் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்மனை சட்டசபை தலைமை காவலர் மூலம் அமைச்சரிடம் ஒப்படைக்க சட்டசபை செயலாளர் அனுப்பியுள்ளார். ஆனால், இந்த சம்மன் அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டதா? என தெரியவில்லை. இதனால் இன்று மாலை 3 மணியளவில் விழுப்புரம் போலீசில் அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராவாரா என கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் கல்யாண சுந்தரம் ஏற்கனவே முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. அதுவரை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
0
கருத்துக்கள்