Recommendations
Recent Activity
மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
கந்தர்வகோட்டை, செப்.13-
 
கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவுப்படி மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகுமரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாந்தகுமரி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின்போது மாற்று திறனாளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக மருத்துவ முகாம்கள், பேச்சு பயிற்சி நடத்தி காது கேளாதோர் கருவி, 3 சக்கர வண்டி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
 
பேரணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். மற்றும் கந்தர்வகோட்டை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜேம்ஸ், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜோசப் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு, தகவல் சாதன அலுவலர் ரகுநாததுரை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சீனிவாசன், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.