நாகர்கோவில், செப்.12-
குமரி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் செட்டிகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் கோட்டார் எஸ்.கோபால் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் என்.தில்லைச்செல்வம், மாநில சட்டத்துறை செயலாளர் எஸ்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது, துணைச்செயலாளர்கள் மகாராஜன், செல்வராஜ், ஆஸ்டின், நகர செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், செயற்குழு உறுப்பினர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜெரோம் ஜெயக்குமார், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் நாகமணி, முன்னாள் அவைத்தலைவர் சிவராஜன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமையா, கபிரியேல், சம்பத்சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தலைமைக்கழகத்தின் விருப்பமனு படிவத்தை மாவட்ட செயலாளரிடம் பெற்று இன்று (12-ந்தேதி) நாளை (13-ந் தேதி), 14, 16 மற்றும் 17-ந் தேதிகளில் உரிய தொகையை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்,
ரேஷன்கடைகளில் மண் எண்ணை, பருப்பு, உளுந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை சரிவர வினியோகிக்காததை கண்டித்து தாலுகா பகுதிகளில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது, வருகிற 15-ந் தேதி நெல்லையில் நடைபெறும் அண்ணா திறந்தவெளி மாநாட்டுக்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.