Recommendations
Recent Activity
அனுப்பம்பட்டு டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை
மீஞ்சூர், செப். 10-
 
மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் அரசுப்பள்ளி, கோவில், தேவாலயம் உள்ளது. இந்த கடையில் மது அருந்தி விட்டு கலாட்டா செய்வதுடன், பெண்களை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெற காரணமாக இந்த மதுக்கடை அமைந்துள்ளது. எனவே இதை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 
இந்த நிலையில் ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமையில் மக்கள் நலப்பணி இயக்கத்தைச் சார்ந்த அழகர்சாமி, வினோத், குணசேகர், மகளிர் குழுவினரான சுகுணா ராணி, ஜெயந்தி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் வேலம்மாள், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ் பெக்டர்கள் பாஸ்கர், மோகன், ரகு, விஜயன் ஆனந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   அப்போது ஒரு மாத காலத்திற்குள் வேறொரு இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றி விடுவதாக உறுதி அளித்தனர். அதன் பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.