சென்னை, பிப். 20-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று கோலா கலமாக தொடங்கியது. வங்காள தேசத்தில் உள்ள மிர்புரில் நேற்று முதல் போட்டி நடந்தது. இந்தியா, வங்காளதேச அணிகள் மோதியது. இதில் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று 2-வது ஆட்டம் சென்னையில் நடந்து வருகிறது. நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதின. கென்யா கேப்டன் கமாண்டே `டாஸ்' ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஓமாண்டா, வாட்டர்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். நியூசிலாந்தின் பந்து வீச்சுக்கு பயந்து இருவரும் மிகவும் நிதானமாக ஆடினார்கள். ரன் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் இருந்தது.
இதனால் 5 ஓவர் முடிவில் 9 ரன்களே எடுத்திருந்தனர். தொடக்க வீரர் ஒமான்டா 6 ரன் எடுத்திருந்த போது சவுதி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தனர். அப்போது கென்யா ஸ்கோர் 7.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்களாக இருந்தது.
அடுத்து வாட்டர்சுடன் ஒபுயா ஜோடி சேர்ந்தார். அவர் அதிரடியாக ஆடினார். அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். சிறிது நேரத்தில் ஒபுயா எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 14 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் களம் வந்த வீரர்கள் நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் கென்யா அணி 23.5 ஓவரில் 69 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 70 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் வந்த நியூசிலாந்து அணி. தொடக்க வீரர்களாக குப்திலும் மேக்குல்லமும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 8 ஓவர் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து, கென்யா அணிகள் மோதுவதால் இந்த போட்டியை காண சென்னை ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் காலையில் மைதானம் காலியாக கிடந்தது. நேரம் செல்ல செல்ல ஓரளவு ரசிகர்கள் வர தொடங்கினார்கள்.
மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் செல்ல வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் அதிகம் வராததால் அனுமதி இல்லாத வாகனங்களும் கூட அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன.