Recommendations
Recent Activity
ஈராக்கில் மீண்டும் வன்முறை: 5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்
பாக்தாத், நவ. 11-

ஈராக்கில் கடந்தவாரம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆலயத்துக்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அவர்களை மீட்க அமெரிக்க ராணுவமும், ஈரான் போலீசாரும் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 கிறிஸ்தவர்கள் பலியானார்கள். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு அல்- கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். ஈராக்கில் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டினார்கள்.

இந்த நிலையில் பாக்தாத் நகரில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கி இருந்த இடத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினார்கள். இதில் 5 பேர் உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிறிஸ்தவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கி வருவதால் அவர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

அடுத்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது. அப்போது பல நாட்கள் கிறிஸ்வர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். அந்த நேரத்தில் பெரிய அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

ஈராக்கில் 6 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்க இந்த மாவட்டங்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.