கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை...
என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர்.
மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல நட்பாகிறார்கள்.
மது மேல் சித்தார்த்துக்கு காதல் மலர்கிறது சீனியர் மாணவரும் அவளை விரும்புகிறான். ஒரு கட்டத்தில் சித்தார்த் மதுவிடம் முத்தம் கேட்க ஆவேசமாகிறாள். நட்பில் பிளவு விழுகிறது. பிரிந்து பேசிக் கொள்ளாமல் திரிகின்றனர்.
விமலும் பெனாசும் நெருக்கமாகிறார்கள். அவர்களுக்குள் இன்னொரு பெண் நுழைய பிரிகின்றனர்.
டைசனுக்கு சீனியர் மாணவி சோனியா மேல் காதல்.
இன்னொரு நண்பன் ஷங்கர் மோசமான நடத்தையுள்ள பெண்ணை காதலித்து அவள் வேறு ஆண்களுடனும் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து உடைகிறான்.
இப்படி வெவ்வேறு காதலின் சந்தோஷம் வலிகளை தொகுத்து உயிரோட்டமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் கே.வி.குகன்.
மாணவர்களின் ராக்கிங், ஊடல்கள், நட்பு, காதல் போன்றவை கல்லூரி வாழ்வுக்கு மலரும் நினைவுகளாய் இழுத்து செல்கின்றன.
சித்தார்த் மது காதல் பூவாய் மனதை வருடுகிறது. சித்தார்த் மேல் வெறுப்பு காட்டும் மது அவன் தன்னை ஆழமாக காதலிப்பதை சக மாணவர்கள் ஆடியோவில் பதிவு செய்து காட்டியதன் மூலம் அறிந்து பார்க்க ஓடுவது அழுத்தம்.
மதுவின் தந்தை காரில் போய் ஒருவரை இடித்து சிக்கலில் மாட்டும் போது அவருக்கு சித்தார்த் உதவும் சீன்கள் நேர்த்தியானவை.
அரசியல்வாதி மகனாக வரும் விமல் கலகலப் பூட்டுகிறார்.
டைசன்-சீனியர் மாணவி சோனியா காதல் இன்னொரு ஒருதலை ராகம். சீனியர்கள் எதிர்ப்பை மீறி சோனியாவை சுற்றுவது கோழிகள் பிடிக்கும் என்றபதற்காக கல்லூரிக்குள் கோழி வளர்ப்பது அம்சம்.
முழுக்க காதலுக்குள்ளேயே காட்சிகள் சுழல்வது லேசான சலிப்பு. மிக்கி ஜோ மேயர் இசையில் பாடல்கள் இனிமை.