குப்பத்தில் இருந்து பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவன் அதர்வா. பட்டம் விடுவதில் கில்லாடி. அவருக்கும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் கோடீஸ்வர பெண் சமந்தாவுக்கும் மோதல் வருகிறது. பிறகு ஒருவரையொருவர் புரிந்து நட்பாகிறார்கள். சமந்தா மேல் அதர்வா காதல் வயப்படுகிறார்.
குப்பத்து ரவுடி பிரசன்னா விடம் அதர்வாவும் அவர் நண்பர்களும் பிரியம் காட்டுகிறார்கள். பிரசன்னா செய்யும் ஒரு கொலையை அதர்வா பார்க்க நேரிடுகிறது. அவரை சாட்சியாக்கி பிரசன்னா கூட்டத்தை பிடிக்க போலீஸ் முயற்சிக்கிறது. எனவே அதர் வாவை தீர்த்து கட்டும் படி பிரசன்னாவிடம் வற்புறுத்துகிறார் தாதா ராஜேந்திரன், பிரசன்னாவுக்கோ கொல்ல மனம் வரவில்லை. இதனால் இன்னொரு கொலையாளியை ஏவுகிறார். சமந்தாவும் அதர்வாவும் காதலை பறிமாறிக்கொள்ளும் போது கொலையாளி அங்கு வருகிறான். அதன் பிறகு நடப்பது இதயத்தை உலுக்கும் கிளைமாக்ஸ்.
ஏழை பணக்கார காதலை யதார்த்தங்களுடன் அழுத்தமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். காத்தாடி விடும் குப்பத்து இளைஞர்களின் சந்தோஷங்களில் குதூகலம். குப்பத்து மாணவன் கேரக்டரில் அச்சு அசலாக பொருந்துகிறார் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகன். சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்தும் போது போலீஸ் பிடியில் சிக்குவது எதிர்பாராத திருப்பம். விடுதலையானதும் பழித்து பேசும் ஊரார் மத்தியில் மகனை விட்டுக் கொடுக்காத தாயின் அன்பை நினைத்து அழும் போது நெஞ்சை கனக்க வைத்து தேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். தவறை உணர்ந்து தன்னிடம் வரும் காதலியை தொடர்ச்சியாய் உதாசீனம் செய்வது ஒட்ட வில்லை.
சமந்தா அழகும் நடிப்பும் கலந்த கலவையாய் கவர்கிறார். தந்தை-மகனாக வரும் டி.பி.கஜேந்திரன், கருணாஸ் கூட்டணியின் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது. தினமும் டி.பி.கஜேந்திரன் பாக்கெட்டில் வைக்கும் பணத்தை நடுராத்திரியில் கருணாஸ் திருட முயன்று தோற்பது ரகளை. பஸ் கண்டக்டராக வரும் மனோ பாலாவும் சிரிக்க வைக்கிறார்.
ரவுடியாக வித்தியாச பரிமாணம் காட்டுகிறார் பிரசன்னா. தன்னை உயர்வாக மதிக்கும் அதர்வாவை தலைவன் கட்டளைப்படி கொல்ல முடியாமல் தவிப் பதில் அழுத்தம் பதிக்கிறார்.
அன்பும் வாயாடித்தன மும் நிறைந்த அம்மாவாக வரும் மவுனிகா நேர்த்தி. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் மிரட்டல் வில்லன். யுவன்ஷங்கர் ராஜா இசையில் தாக்குதே கண் தாக்குதே பாடல் முணு முணுக்க வைக்கிறது. கிளைமாக்சை இன்னும் வித்தியாசமாக யோசித்து இருந்தால் கத்தாடி உயர பறந்து இருக்கும்.