Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
`பளிச்' நிறம் பயங்கரம்
எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவுப் பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைப் பற்றியே கலங்கிக் கொண்டிருக்க... புதிய அபாயத்தையும் நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். ஆம்... இன்றைக்கு உணவுப் பொருட்களில் பளீர் நிறத்துக்காக கலக்கப்படும் அனைத்து செயற்கை ரசாயனங்களும் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பது மட்டுமின்றி, உயிருக்கே ஆபத்தாகவும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
உதாரணமாக, காபித்தூளில் சிக்கரித்தூள் கலப்படம் செய்யப்படுகிறது. பொதுவாக எல்லா காபித்தூள் பாக்கெட்டிலும், அதில் கலக்கப்பட்டிருக்கும் சிக்கரியின் சதவிகிதம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், குறிப்பிட்ட அந்த அளவுக்கு அதிகமாக சிக்கரியை சேர்த்தால் அது கலப்படம்.
 
அதேபோல், தேயிலைத் தூளுடன், பளீர் நிறத்துக்காக சாயம் கலக்கப்படுகிறது. கூட்டுப் பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கப்படுகின்றன.
 
குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதைப் பொருட்களும் கலக்கப்படுகின்றன. பலவித கலர் இனிப்புகளில் நிறத்துக்காக இப்படி சேர்க்கப்படுகின்றன.
 
டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம். இத்தகைய கலப்படம், கல்லீரல் கோளாறுகளை உண்டாக்கும்.
 
நன்றாக பொடியாக்கப்பட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி. இதனால் அலர்ஜி, சீதபேதி ஏற்படலாம்.
 
குளிர்பானங்களில், பொங்கி வழியும் நுரைக் காக, கவர்ந்திழுக்கும் நிறம், குடிக்கும்போது `சுர்' என்று ஏறும் உணர்வுக்காக சில ஆசிட் கலக்கப்படுகின்றன.
 
இப்படி கலக்கப்படும் இனிப்பு, ஜாம் மற்றும் பழரசத்தை எடுத்து, அதனுடன் சுடுநீர் சேர்த்து கலக்கினால் வண்ணங்கள் பிரிந்து விடும். அதனுடன் சில துளிகள் ஹெச்.சி.எல். எனப்படும் கெமிக்கலை சேர்த்தால், வெளிர் சிவப்பு நிறம் தோன்றும். இதன்மூலம் அதில் கலப்படம் என்பது உறுதியாகும்.
 
உணவுப் பொருட்களில் வண்ணங்கள் எந்தளவுக்கு கலக்கலாம். எவையெல்லாம் இருக்கலாம் என்பதற்காக இந்திய அரசில் `ப்ரிவென்ஷன் ஆப் புட் அடல்ட்ரேஷன்' என்ற சட்டப்பிரிவின் கீழ் சில கெமிக்கல்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவற்றை `பெர்மிடட் கலர்' என்பார்கள்.
 
தரமான கடைகளில் ஸ்வீட் வாங்கும்போது அந்த ஸ்வீட்டில் என்னென்ன கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது என்பதை அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருப்பார்கள்.
 
அனுமதிக்கப்படாத வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அது உடலுக்கு பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் வரும் `மெட்டானில் யெல்லோ மற்றும் லீட் குரோமேட்' ஆகியவை கேன்சரை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல்கள் ஆகும். ரோடமின் பி எனப்படும் கெமிக்கல், குடல் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரஞ்சு டூ கிட்னியை பாதிக்கும். காங்கோ ரெட் என்பது கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய கெமிக்கல்களை `கோல் டார் டைஸ்' என்று சொல்வார்கள்.
 
சில வகை ஸ்வீட்களில் வெள்ளி ஜரிகைக்கு பதிலாக அலுமினியம் பாயல் கலப்படம் செய்யப்படுகிறது. இதை சாப்பிடும்போது அது வயிற்றுக் குழாயை பாதித்து, இரைப்பையில் சேதம் ஏற்படுத்தும். இதனால் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும்.
 
அதேபோல் வீட்டில் சமைக்கும் கேசரி பவுடர், ஜிலேபி பவுடர் போன்ற பொருட்களிலும் கலப்படம் இருக்கிறதா என்பதை கண்டறிவது நல்லது.