Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
அதிகரித்து வரும் `அழகு அதிர்ச்சி'
டீன் ஏஜ் வயதில் அடியெடுத்து வைக்கும் பெண்பிள்ளைகள், முகச்சுருக்கக் கோடுகள், புருவத்தை மென்மையாக்குவது, உயர்த்துவது, சிரிக்கும்போது ஏற்படும் கோடுகளை அகற்றுவது, கரும்புள்ளிகளை அகற்றுவது ஆகியவற்றுக்கு அழகுச் சிசிச்சை நிபுணர்களை நாடி வருகிறார்கள். ஆனால் இந்த வழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
 
`போட்டாக்ஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் `பொட்டுலினம் டாக்சின்' என்பது தீவிர நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருள். இதைச் செலுத்தியும் அழகுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
தோல் மருத்துவ நிபுணரும், பிரபல `காஸ்மெட்டிக்' சிகிச்சை வல்லுநருமான டாக்டர் ராஷ்மி ஷெட்டி, ``எனது கிளினிக்குக்கு `போட்டாக்ஸ்' சிகிச்சைக்காக வருபவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் டீன் ஏஜ் வயதினர். பெரும்பாலும் 15 முதல் 17 வயதைச் சேர்ந்தவர்கள். டீன் ஏஜ் வயதினர் அதிகமாகக் கேட்பது, தாடை அகலத்தைக் குறைக்க வேண்டும், சிரிக்கும்போது கண்கள் குறுகித் தோன்றுவதை மாற்ற வேண்டும் என்று கேட்டுத்தான்'' என்கிறார்.
 
அவர் மேலும் கூறுகையில், அகன்ற தாடையைச் சரிப்படுத்துவதற்கு மெல்லும் தசைகளுக்குள் `போட்டாக்ஸ்' செலுத்தப்படுகிறது. அது முகத்துக்கு அழகான, நீள்வட்ட வடிவத்தை அளிக்கும் என்கிறார்.
 
சிரிக்கும்போதும் கண்கள் குறுகலாவதைத் தவிர்க்க கண்களுக்குக் கீழே புரதம் செலுத்தப்படுகிறது. அதன்மூலம், நன்றாகச் சிரிக்கும்போது கூட கண்கள் பெரிதாகவும், பிரகாசமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
 
பருத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்த விசாரணையும் அதிகரித்து வருகிறது.
 
``மிகச் சிறிதளவு, நீர்த்த `போட்டாக்ஸ்', முகத்தின் வியர்வைச் சுரப்பிகளுக்குள் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் வியர்வைச் சுரப்பிகள் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுத்து, முகத்துக்கு மென்மையான, `பளிச்'சென்ற தோற்றம் தரப்படுகிறது'' என்கிறார் ராஷ்மி.
 
மற்றொரு ஆர்வமூட்டும் விஷயம், இவரிடம் அழகுச் சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாரிசுகள். இந்தியாவில் தங்கிப் படிக்கும் அவர்கள் இங்கு நிலவும் காலநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடலைச் சீர்திருத்திக்கொள்ள வருகிறார்கள். அவர்கள் அதிகமாகக் கேட்பது, நெற்றிக்கோடுகள், சுருக்கங்களைச் சரிசெய்யும்படி.
 
தங்களை நாடிவரும் டீன் ஏஜ் பெண்களுக்கு அழகுச் சிகிச்சை செய்வதற்கு முன் அந்த நிபுணர்கள் கூடுமானவரை தவிர்க்கவே முயலுகின்றனர், நிறைய விசாரிக்கின்றனர். ஆரோக்கியமான மாற்றுவழிகளை நாடும்படி அறிவுரை கூறுகின்றனர். அதாவது, சரியான உணவுமுறை, தோல் பராமரிப்பை மேற்கொள்ளும்படி கூறுகின்றனர்.
 
டீன் ஏஜ் வயதினருக்குத் தான் `போட்டாக்ஸை' பயன்படுத்த மறுப்பதாகக் கூறுகிறார் மற்றொரு அழகுச் சிகிச்சை நிபுணர் அனில் ஆப்ரஹாம்.
 
``போட்டாக்ஸ் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு எங்களை நாடிவரும் 10 பேரில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பேர் டீன் ஏஜ் பெண்கள். அவர்களில் சிலருக்கு 13 வயதுதான் ஆகியிருக்கிறது. நான் அவர்களிடம், வெளியே போகும்போது `சன் ஸ்கிரீன்' பயன்படுத்துமாறும், சமச்சீரான, சத்தான உணவு முறையை மேற்கொள்ளுமாறும், அது அவர்களின் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் அறிவுரை கூறுகிறேன். இந்த இளம்வயதிலேயே அழகு சிகிச்சைக்கு முயற்சிப்பதற்குப் பதிலாக `ரெகுலராக' `மாஸ்சரைசர்' பயன்படுத்தும்படி எடுத்துச் சொல்கிறேன்'' என்கிறார் ஆப்ரஹாம்.
 
`போட்டாக்ஸ்' பயன்படுத்துவதால் தலைவலி, சுவாசத் தொற்று, `புளூ' காய்ச்சல், கண்ணிரப்பை தொய்வு, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.