முதல் , இரண்டாம் தாரம் மகன்ளுக்குள் நடக்கும் சொத்து தகராறே கதை...
பிரான்சில் வசிக்கும் சர்வதேச ஆயுத வியாபாரி ஜுவானந்தம். அவருக்கு முதல் மனைவி மூலம் சம்பத், ராஜீவ், இரண்டாவது மனைவிக்கு பிறந்த அஜீத் என மூன்று மகன்கள்.
முதல் சம்சாரம் பிள்ளைகள் அஜீத் மேல் வெறுப்பு காட்டுகின்றனர். அவர்களை ஒற்றுமை படுத்த ஜீவானந்தம் எடுக்கும் முயற்சிகள் தோற்கின்றன.
சொத்துக்களை அஜீத் பெயருக்கு உயில் எழுதுகிறார். மறு நாள் படுக்கையில் மர்மமாய் இறந்து கிடக்கிறார்.
தந்தை சாவுக்கு பின் சம்பத்தும் ராஜீவும் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் மும்பை நிழல் உலக தாதா ஷெட்டியிடம் ஒப்பந்தம் போடுகின்றனர். பிறகு அவனை ஏமாற்றுகின்றனர். ஆத்திரமாகும் ஷெட்டி ராஜீவை கடத்தி மும்பையில் அடைத்து வைக்கிறான். தம்பியை மீட்க அஜீத் இந்தியா வருகிறார்.
பிரபு துணையோடு ஷெட்டியின் நெட்வொர்க்கை அழிக்கிறார். ஷெட்டியை கொன்று தம்பியை மீட்கிறார். அப்போது அந்த விபரீதம் நடக்கிறது. தங்களுக்கு உதவியதையும் மறந்து தம்பி அஜீத்தை சம்பத்தும் ராஜீவ்வும் சுட்டு கடலில் போடுகின்றனர். அஜீத் செத்ததாக சான்றிதழ் வாங்கி சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றுகின்றனர்.
உயிருக்கு போராடிய அஜீத்தை பிரபு காப்பாற்றுகிறார். அதன் பிறகு அண்ணன்களுக்கு பாடம் புகட்ட மீண்டும் பிரான்ஸ் பறக்கிறார். அங்கு தந்தை சாதாரணமாக சாகவில்லை கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது. கொலையாளிகள் யார் என்பதும் அவர்களை வேட்டையாடுவதும் கிளைமாக்ஸ்...
அப்பா, மகன் என இரு வேடம் கட்டியுள்ளார் அஜீத். அமைதியும் பாசமும் கலந்த தந்தை கெட்டப் கச்சிதம்.
மகன் அஜீத் ஆக்ஷன் தனத்தில் அதிர வைக்கிறார். இந்திய தூதரை கடத்தும் கும்பலை தவிடு பொடியாக்கி அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம். மும்பையில் வில்லன் ஷெட்யின் இரு தளபதிகளை தீர்த்து கட்டுவது பரபர. ஷெட்டி கொல்லப்பட்டதும் கதை வேறு ரூட்டுக்கு தாவுகிறது.
அண்ணன்களுடன் சேர்ந்து வாழ அஜீத் துடிப்பதும் அவர்கள் குரூர வில்லன்களாக மாறுவதும் விறுவிறுப்பு... தந்தையை கொன்றவர்களை பழி தீர்க்கும் கிளைமாக்ஸ் அனல்.
சம்பத், ராஜீவ் கொடுமைக்கார அண்ணன்களாக அரிதாரம் பூசியுள்ளனர். ஷெட்டி பயங்கர வில்லன். பாரீஸ் இந்திய தூதரகத்தில் கலைக்குழுவில் அங்கம் வகிக்கும் சமீரா ரெட்டி வில்லன் கூட்டத்தில் சிக்கி படும் அவஸ்தைகளில் பரிதாப படவைக்கிறார். அஜீத்தை நேசிக்கும் மும்பை வாசி பாவனா, காதலில் ஜீவன் காட்டுகிறார்.
ஆயுத வியாபாரம், சர்வதேச கடத்தல், தாதாக்கள் ராஜ்ஜியம் ஆக்ஷனில் “ஸ்டைலிஷ்” ஆக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சரண். வில்லன் ஷெட்டி கதையை இடைவேளையில் முடித்து திரைக்கதையை அண்ணன் தம்பிகள் சண்டைக்கு திருப்பி விடுவது அழுத்தத்தை குறைக்கிறது. பாரீஸ் போலீசாக வரும் சுரேஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். பிரசாந்த் மிஸ்சாலே ஒளிப்பதிவில் பாரீஸ் பிரமாண்டம் பரத்வாஜ் பின்னணி இசை ஒன்ற செய்கிறது.