ஒரே கல்லூரியில் படிப்பவர்கள் பிரசன்னா, சந்தியா. அவர்களை காதலர்களாக பார்க்கின்றனர் சக மாணவர்கள்.
சந்தியா அக்காள் தாரிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. பிரசன்னாவையும், இதர நண்பர்களையும் திருமணத்துக்கு அழைக்கிறார். சந்தியா அழகில் மயங்கும் மாப்பிள்ளை ஆர்.கே, தாரிகாவுக்கு பதில் சந்தியாவை மணக்க விரும்புகிறார். மின்சார ஷாக் கொடுத்தும் விஷம் தந்தும் தாரிகாவை கொல்ல முயற்சிக்கிறார். அதிலிருந்து தப்புகிறார் தாரிகா. மனமேடையில் தாரிகா சர்க்கரை நோயால் மயக்கமாகி விழ திருமணம் நிற்கிறது. நோயாளி பெண்வேண்டாம் என எதிர்க்கிறார் ஆர்.கே.யின் தாய். தாரிகாவுக்கு பதில் சந்தியாவை கட்டித்தர நிர்ப்பந்திக்கின்றனர். தந்தை நிழல்கள் ரவி சம்மதிக்கிறார்.
அதிரும் சந்தியா பிரசன்னாவுடன் ஊரை விட்டு ஓடுகிறார். எம்.எஸ். பாஸ்கரிடம் அடைக்கலமாகிறார்கள். அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிக்க நாங்கள் காதலர்கள் இல்லை, நண்பர்கள் என்று குண்டு தூக்கி போடுகின்றனர்.
பிளாஷ்பேக்கில் பாலா, சந்தியா காதல் விரிகிறது. பாலாவை தேடி அலைகிறார் பிரசன்னா. அவரை கண்டு பிடிக்கும் போது வில்லன்களால் குத்தப்பட்டு கோமா நிலைக்கு போகிறார். பிரசன்னாவை அந்த நிலையில் விட்டு பாலாவுடன் போக மறுக்கிறார் சந்தியா. பிறகு நடப்பது கிளைமாக்ஸ்...
நட்பு, காதலுக்குள், கதையை புகுத்தி மனதை வருடியபடி நகர்த்துகிறார் இயக்குனர் வசீகரன். பிரசன்னா, சந்தியா நட்பு அழுத்தம். இருவரும் காதலர்கள் இல்லை என மறுப்பது திருப்பம். பாலாவுடன் பிரசன்னா மோதுவது... சந்தியா, அவரை விரும்புவது தெரிந்து கோவில் மணி அடித்து இருவரையும் சேர்ப்பது வலுவானவை.
காதலன் பாலாவை தேடி அலைவது வில்லனிடம் இருந்து அவரை காப்பாற்றி விட்டு வேனில் அடிபட்டு குற்றுயிராய் கிடப்பது என மனதை தொடுகிறார். சந்தியா துறு துறுவென வருகிறார்.
பாலாவுடன் காதல் வயப்படுவது கவிதை.... காதலனை தேடி பிரசன்னா படும் கஷ்டங்கள் அறிந்து காதலே வேண்டாம் ஊருக்கு போகிறேன் என்று அழும் போது நடிப்பில் மெருகு.... பாலாவும் நடிப்பில் போட்டி போட்டு உயர்கிறார். ஆர்.கே. வில்லத்தனம் மிரட்டல். பேராசிரியராக இருந்து ஆட்டோ டிரைவராக மாறும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை.. கவியரசு ஒளிப்பதிவில் ஊட்டி அழகு.
நட்பு, காதல் உணர்வுகளை இன்னும் உயிரோட்டமாக செதுக்கி இருக்கலாம்.